தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 31 August 2013

பொருளாதார நெருக்கடி - யார் காரணம்?



அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் இதுவரை 16 சதவீதம் சரிவடைந்துள்ளது. நிதி ஆண்டின் தொடக்கத்தில் ரூ 54 ஆக இருந்த டாலர் தற்போது ரூ65 ஆக குறைந்துள்ளது. இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது. பன்னாட்டு நிதிமூலதன கும்பலுக்கு இந்திய சந்தையை திறந்து விட்டதற்கான விலையை ஒட்டுமொத்த இந்திய மக்களும் தரப் போகிறார்கள். அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை நிறுத்தப் போவதால் அன்னிய நிதி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை பெருமளவில் விலக்கிக் கொண்டுள்ளன. இதனால் ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிந்துள்ளது. ஏற்கெனவே நடப்புக்கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் இந்த டாலர் வெளியேற்றத்தை குறைப்பதென்பது பெரும் சவாலாக இந்திய அரசுக்கு மாறியிருக்கின்றது. ரூபாய் மதிப்பு சரிவால் கச்சாஎண்ணையின் கொள்முதல் செலவு பெருமளவில் அதிகரிக்கும். அதன் தொடர்விளைவாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படும். இது சங்கிலித் தொடர்போன்று விலைவாசி உயர்வையும் மக்களின் வாங்கும் திறனையும் குறைத்து மேலும் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லும்.

ஒரு நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் எனில் அந்நாடு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்க வேண்டும். ஆனால் இந்திய ஆளும் வர்க்கம் பன்னாட்டு முதலாளிகளின் கைக்கூலிகளாகவும் அவர்களின் நலனை காப்பாற்றுவதற்காக இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களைக் கொலை செய்யவும் தயங்காத கொலைகார கும்பலாகவும் இருப்பதால் அனைத்துத் துறைகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நிதியாதிக்க கும்பலுக்கும் திறந்துவிட்டனர். அவர்கள் தங்கள் விருப்பம்போல் கொள்ளையடிக்க அனுமதி கொடுத்தனர். இதன் விளைவாக ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியும் வீழ்ச்சியடைந்து இன்று முடமாகிக் கிடக்கின்றது. பெரும்பாலான தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியைக் குறைத்துள்ளன. பல லட்சம் தொழிலாளிகள் வேலையிழப்புக்கு உள்ளாகி உள்ளனர்.


அரசு திட்டமிட்டே வேளாண்துறையைப் புறக்கணித்ததால் இன்று பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களில் கூலிவேலை செய்பவர்களாக மாறியிருக்கிறார்கள். நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அதுசார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்துறையின் பங்கு வெறும் 14.1 சதவீதம் தான் உள்ளது.

ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் , தொலைதொடர்பு மற்றும் காப்பீடு போன்ற சேவைத் துறைகளின் பங்களிப்பு ஒட்டுமொத்த உற்பத்தியில் 60 சதவிதம் உள்ளது. பெரும்பான்மையான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேளாண்மை மற்றும் தொழில்துறை உற்பத்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு சில பெரும் மூலதனம் கொண்ட கார்ப்ரேட்டுக்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் சேவைத்துறையை வளர்த்துவிட்டதானது பெரும்பான்மை இந்திய மக்களின் வேலை வாய்ப்பைப் பறித்து அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கின்றது; கோடிக்கணக்கான இந்திய மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றியிக்கின்றது. உயிர்வாழ்வதே பெரும் போராட்டமாக மாறியிருக்கும்போது எப்படி ஒரு நாடு முன்னேறும்?

அந்நிய மூலதனம் பெருமளவில் வெளியேறியதால் ரூபாய் மதிப்பு சரிந்திருக்கின்றது. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இரண்டு வகையான அந்நிய மூலதனம் இந்தியாவிற்குள் வருகின்றது. ஒன்று நேரடி அந்நிய மூலதனம்(FDI) மற்றொன்று அந்நிய நிறுவன முதலீடுகள்(FII). இதில் நேரடி அந்நிய மூலதனம் என்பது உண்மை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றது. அதிக நிலைத்த தன்மை கொண்டது. உடனடியாக மூலதனத்தை திரும்ப எடுத்துச்செல்ல முடியாது. ஆனால் அந்நிய நிறுவன முதலீடுகள் அப்படியல்ல. இவை உண்மை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது. பங்குச்சந்தைகளில் நுழையும் இந்த வகை முதலீடுகள் செயற்கையாக பங்குச்சந்தைகளை உயர்த்தி லாபம் வரும் வேளைகளில் அதை விற்று பெரும் லாபம் ஈட்டிக்கொண்டு ஓடிவிடுகின்றன. இதனால் டாலர் பெருமளவில் வெளியேறி ரூபாய் மதிப்பு சரிகின்றது. ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் இதுபோன்ற அந்நிய நிறுவன முதலீடுகள்தான் இந்தியாவிற்குள் பெருமளவில் வருகின்றது. இதுபோன்ற முதலீடுகளுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. அவை எப்போது வேண்டுமென்றாலும் தங்களது முதலீடுகளை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். இதுபோன்ற நிலையில்லாத முதலீடுகளே பங்குச்சந்தையில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளன‌. எனவே அவை வெளியேறியது ஒன்றும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விசயமல்ல.

ஆனால் இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட பங்குச்சந்தை கொழிப்பைக் காட்டி இந்தியா வளர்கின்றது என்று நம்மை ஏமாற்றிய இவர்களை எந்த கம்பெனி செருப்பால் அடிப்பது? ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவில் உள்ள 85 சதவீத மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட போகிறார்கள். பங்குச்சந்தையோடு சம்பந்தமே இல்லாத இவர்கள் எதற்காக பாதிக்கப்பட வேண்டும்? இந்திய ஆளும் வர்க்க அடிவருடிகளும், பன்னாட்டு நிதியாதிக்க கும்பல்களும் செய்த மோசடிகளுக்கு சாமானிய இந்திய மக்கள் பொறுப்பேற்க வேண்டுமா?

ரூபாய் மதிப்பு பெருமளவில் சரிந்துள்ளதைப் பயன்படுத்தி இந்தியாவின் சொத்துக்களை பன்னாட்டு நிதியாதிக்க நிறுவனங்கள் கையகப்படுத்தும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே பன்னாட்டு நிறுவனங்களும், நிதியாதிக்க கும்பல்களும் ஆட்டிப்படைக்கும் சூழ்நிலை உருவாகலாம்.

ஆனால் இதைப் பற்றியெல்லம் கவலைப்படாத மன்மோகன்சிங், .சிதம்பரம் போன்ற தேசத் துரோகிகள் தொடர்ந்து அந்நிய மூலதனத்தை அனைத்து துறைகளிலும் வரைமுறை இன்றி அனுமதிப்பதன் மூலம்தான் பொருளாதார நெருக்கடியை சாமாளிக்க முடியும் என்று மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். இதற்காக உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற கொள்கைகளை விட்டுவிடமுடியாது என்று திமிறாகப் பேசுகின்றனர்.

ரூபாய் மதிப்பு விழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி எல்லா வளரும் நாடுகளும் கரன்சி மதிப்பு வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் உரிய அளவு என்று கருதும் அளவைவிட அதிகமாக ரூபாய் மதிப்பு வீழ்ந்து விட்டது. மேலும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த முதலீட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கும் திட்டம் ஏதும் இல்லைஎன்று கூறும் .சிதம்பரம், அப்துல் கரீம் துண்டாவை விட கொடிய தேசத்துரோகி. பாதுகாப்புத் துறையில் கூட அந்நிய மூலதனத்தை அனுமதித்ததன் மூலம் இதை மேலும் உண்மையாக்கியிருக்கிறார் .சி. அவர்கள்.

இப்போது இந்தியா கைவசம் வைத்திருக்கும் டாலரின் பெரும்பகுதி வெளிநாடு வாழ் இந்தியர்கள் போட்டிருக்கும் வைப்புத்தொகையே ஆகும். ஆனால் இந்த தேசபக்தர்களின் வைப்புத்தொகைக்கு அதிகப்படியான வட்டியை கொடுக்க வேண்டியிருக்கின்றது. இந்தியா முதலீடு செய்து வரும் வட்டியை விட இது அதிகமாக இருப்பதால் அந்நிய செலவாணியைப் பெறுவதற்காக பாராளுமன்றத்தைக் கூட பகுதிநேரமாக அந்நிய சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் திட்டம் கூட இவர்களின் கைவசம் இருக்கலாம் என்று நாம் நம்பலாம்.

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை சரிக்கட்ட உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல் போன்ற கொள்கைகளை ஒட்டி எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் மீண்டும் மீண்டும் பெரும் தோல்வியிலேயே முடியும் என்பதையே உலக நடப்புகள் நமக்குக் காட்டுகின்றன

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியை பெருக்கி அதை ஏற்றுமதி சார்ந்ததாக மாற்றியமைக்க வேண்டும். இதன் மூலம் பெரும்பாலான மக்களுக்கு வேலைவய்ப்பை வழங்க முடியும். 60 சதவீதம் மக்கள் நம்பியிருக்கும் வேளாண் துறையின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வேளாண் துறையைக் காப்பாற்ற ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். இதன்முலம் பெரும்பாலான இந்திய மக்களின் வாங்கும் திறன் மேம்படும். மக்களின் வாங்கும் திறன் மேம்பட்டாலே நாட்டின் பொருளாதார வளச்சிவீதம் அதிகரிக்கும். ஆனால் இதையெல்லாம் இவர்கள் செய்வார்கள் என்று நாம் எதிப்பார்த்தால் நாம் முட்டாள்களே ஆவோம். ஏனென்றால் நாம் வாழ்வது சோசலிச நாட்டில் அல்ல!

இந்தப் பொருளாதார நெருக்கடி பெரும்பான்மை இந்திய மக்களை ஆளும்வர்க்கங்களுக்கு எதிராக அணிதிரட்டப் போகின்றது. எண்ணியலான மாற்றங்கள், பண்பியலான மாற்றங்களுக்கு வழிவகுக்கும். முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளும்.
 நன்றி: செ.கார்கி “கீற்று வலைதளம்”

No comments:

Post a Comment