தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 29 April 2014

மே தினம்


வர்க்கமாய் உணர்தலே
உயர்திணை
ஏதோ, வாழ்ந்தோம் என்பது
அஃறிணை.

சங்கமாய் திரள்வதே சரிநிலை
வெறும் சந்ததிப்பெருக்குதல் உயிர்ப்பிழை.
பலரும் போராடி பெற்றதுன் பயன்நிலை
போராடும் வர்க்கத்துடன் சேராதிருப்பது இழிநிலை

நமைச்சுற்றி பகை வர்க்கம்
உலகெங்கும் ஓர் இழை,
அரசியல் வேண்டாமென்பது சதி வலை,
அறுத்தெறிந்து, அமைப்பாகு தொழிலாளியே,
மே நாள் அழைக்கிறது!
வர்க்கப் போராட்டமே உன் வாழ்நிலை.
பாட்டாளி வர்க்கமாய் ஒன்று சேர் பயமில்லை!

எதற்கெடுத்தாலும், “எனக்கு நேரமில்லை
இந்தப் புரட்சிஇயக்கமெல்லாம் பழக்கமில்லை
கொடி பிடித்தல்கோஷமிடுதல் ஒத்து வராது
கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது
என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து
மேலும் சிவக்குது மே நாள்!

கடித்து அழிக்க வரும் கட்டெறும்பை
எதிர்கொண்டு வேர்விடும், விதை.
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர்,
ஆடு, மாடுகள் மிதித்தும் அடங்காமல்
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி,
பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு!
உனக்கும் வேண்டுமா?
போராடிப் பார்!
 
உணவுக் கூடத்திலும்
உளவுபார்க்கும் கேமரா,
வார்த்தையை பிடுங்கி
உனது வர்க்க உணர்வை சோதிக்கும் சூப்பர்வைசர்,
கட்டளைக்கு எதிராக இமைத்தாலே
பணிநீக்கும் அதிகாரம்,
புரையேறினாலும்
சக தொழிலாளியிடம் தண்ணீர் கேட்க கை நீட்டாமல்
தானே தலையில் அடித்துக் கொண்டு
தனியே ஒதுங்கும் பயம்கொண்ட தொழிலாளி 

இத்தனைக்கும் மத்தியில்
ஆங்கேஒரு சங்கத்தை உருவாக்கி
கொடியேற்றி தலைநிமிரும் தொழிலாளர்..
அவர் போராட்ட அழகில்
மே நாள் சிலிர்க்கும்!

உயிரைக்கொடுத்துப் போராடி
மேநாள் தியாகிகள் பெற்றுக்கொடுத்த உரிமைகளை
ஒவ்வொன்றாய் இழப்பது
நம் வாழ்நாளின் கேவலம்.

உழைப்பை கூலிக்கு விற்பதையே
எதிர்த்தவர்கள் அவர்கள் இன்றோ
உணர்ச்சியையும் கூலிக்கு விற்கத் தயார்,
உலகமயச் சுரண்டலுக்கும் இணங்கத் தயார்.
இருப்பவர்களின் காட்சிகளைப் பார்த்து
இறந்தவர் கனவு அஞ்சுகிறது!
 
மேநாளின் இலக்கு,
எட்டுமணிநேர வேலை மட்டுமல்ல,
முதலாளித்துவத்தையே எடுத்தெறியும் வேலை.

மேநாளின் சிறப்பு,
நம்மை முதலாளித்துவ சிந்தனையிலிருந்து
விடுவித்துக் கொள்வதுதான்

செய்! மேநாள் சிலிர்க்கும்


தோழனுக்கு ஒரு வாழ்த்து!


Monday 28 April 2014

காத்திருக்கும் அபாயம் : மின் கட்டணம் 15 சதவீதம் உயர்கிறது?

தமிழக மின் வாரியத்தின் நஷ்டம் ரூ.45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.75 ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டதாகவும், இதை சமாளிக்க, மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் மின் கொள்கை தமிழகத்தில் ஆளும் அரசுகளின் குளறுபடிகள் போன்றவற்றால் மின் வாரியத்தின் இழப்பு ரூ.45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.75 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. நிலைமையை சரிசெய்ய, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, ஆண்டுக் கணக்கையும் மின் கட்டணம் குறித்த மறுஆய்வு அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு 15 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் ஊழியர்களுக்கு சம்பளமே கொடுக்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்த அறிக்கையை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் அதிகாரிகள் விரைவில் தாக்கல் செய்வார்கள் எனவும் கூறப்படுகிறது.

சமீபகாலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நிலக்கரி மற்றும் நாப்தா விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. இதனால் புதிய மின் திட்டங்களுக்கு அதிக நிதி செலவிட வேண்டியுள்ளது. வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான போக்குவரத்து செலவும்அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களாலும் நஷ்டம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


நன்றி: தீக்கதிர்

Friday 25 April 2014

30வது தேசியக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை

JAO / JTO தேர்வுகளின் மதிப்பீட்டில் தளர்வு:
JAO / JTO தேர்வுகளுக்கான வினாக்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அந்த தேர்வுகளின் விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதில் தளர்ச்சி செய்து மேலும் சில ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கோரபட்டது. நிர்வாகம் ஏற்கவில்லை.

OFFICIATING JTOக்களுக்கு நிரந்தர JTO பதவி உயர்வு:
1500 OFFICIATING JTOக்களுக்கு நிரந்தர JTO பதவி உயர்வு வழங்குவதற்குத் தேவையான திருத்தங்களை, பணி நியமன விதிகளில் ஏற்கனவே கொண்டு வந்திருப்பதாகவும் நிர்வாகக் குழு ஒப்புதலுக்குப்பின் நிரந்தர பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் நிர்வாகத்தரப்பு கூறியது.

பயிற்சி மேலாண்மை பதவிகளுக்கு தேர்வு எழுத NON EXECUTIVEகளுக்கு அனுமதி வேண்டும்:
NON EXECUTIVE ஊழியர்களும் தேர்வு எழுதும் வகையில் பயிற்சி மேலாளர்கள் பணி நியமன விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று ஊழியர் தரப்பில் இருந்து விவாதம் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து வலியுறுத்தியன் காரணமாக, முதல் தேர்வு முடிந்தவுடன் அதற்கான பரிசீலனை துவக்கப்படும் என்று நிர்வாகத் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

JTO / JTO சிவில் /  JTO எலெக்டிரிசல் / JAO பணி நியமன விதிகளில் திருத்தம்:
JTOக்களுக்கான நியமன விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. தேர்வு எழுதுவதற்கு குறைந்த பட்சம் 7 ஆண்டு சேவை புரிந்திருக்கவேண்டும் என்ற விதி, 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று நிர்வாகத் தரப்பு கூறியது. அதை 4 ஆண்டுகளாகக் குறைக்கவேண்டும் என்று ஊழியர்தரப்பு கோரியது. ஆனால் நிர்வாகத்தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. JTO சிவில் மற்றும் எலக்ட்ரிகல் நியமன விதிகள் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் நிர்வாகத்தரப்பு கூறியது.

காலியாக உள்ள SC / ST பதவி இடங்களை நிரப்புதல்:
நிரப்பப்படாமல் காலியாக உள்ள SC / ST பணி இடங்கள் எதுவும் இல்லை என்று நிர்வாகத் தரப்பு கூறி உள்ளது.

TSM மற்றும் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம்:
உமாதேவி என்பவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் காரணமாக எந்த தற்காலிக ஊழியரும் பணி நிரந்தரம் பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று நிர்வாகத்தரப்பு கூறியது.

பயிற்சிக்கால உதவித்தொகையில் மாற்றம்:
ஊதியத்தில் 70% தொகையை பயிற்சிகால உதவித்தொகையாக வழங்க வேண்டும் என்று 07.4.2014ல் உத்தரவு வெளியிடப்பட்டு விட்டது என்று நிர்வாகத் தரப்பு கூறியது. இந்த உத்தரவை 1.1.2007ல் இருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஊழியர் தரப்பு கோரிக்கையை நிர்வாகத் தரப்பு ஏற்றுக் கொண்டது.

புதிய ஊழியர்கள் நியமனம்:
பணி இடங்கள் பல காலியாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, புதிய ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று ஊழியர் தரப்பு கோரியது. பன்முகத் திறன் கொண்ட ஊழியர்களே இன்றைய தேவை என்றும் அதற்கேற்றவாறு ஆலோசிக்கப்படும் என்றும் நிர்வாகத்தரப்பு கூறியது.

பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் சிறப்பு விடுப்பு:
பெண் ஊழியர்களின் குடும்ப, அலுவலகப் பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மாதம் ஒரு நாள் சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும் என்று ஊழியர் தரப்பு வலியுறுத்தியது. நமது நிறுவனம் அரசு விதிகளைப் பின்பற்றுவதால் அரசு விதிகளில் இல்லாத ஒன்றை BSNLல் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியது.

அனைத்து NON EXECUTIVE ஊழியர்களுக்கும் ரூ.200க்கான சிம்:
அவுட்டோர் பணியிலிருக்கும் அனைத்து NON EXECUTIVE ஊழியர்களுக்கும் தற்போது ரூ.200க்கான சிம் எற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி அனைத்துப் பிரிவு NON EXECUTIVE ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இணைப்புகளையும் தொடர்பு கொள்ளும் வசதியும் அதிகாரிகளின் இணைப்புகளுடன் CUG வசதியும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது. இது பற்றி பரிசீலிப்பதாக நிர்வாகத் தரப்பு கூறியது.

பதவி பெயர் மாற்றக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

பதவிப் பெயர்களை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு 24.04.2014 அன்று கூடுவதாக இருந்தது. NFTE செயலர் தோழர்.ராஜ்பால், அவர்களுடைய மகன் இயற்கை எய்தியதை அடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tuesday 22 April 2014

’டவர்களுக்கென்று ஒரு துணை நிறுவனம்’ என்ற போர்வையில் நிர்வாகத்தின் தனியார்மய முயற்சி !

டவர் துணை நிறுவனம் உருவாக்குதல் தொடர்பாக நிர்வாகத்தின் அறிமுகம்.

டவர்களுக்கென்று ஒரு துணை நிறுவனத்தை உருவாக்குவது தொடர்பான வரைவுத் திட்டத்தை, நிர்வாகம் 21.04.2014 அன்று தொழிற்சங்கங்களுக்கு அறிமுகப்படுத்தியது. பெரும்பான்மையான சங்கங்கள் கலந்து கொண்டன. தோழர். அபிமன்யு, தோழர். நம்பூதிரி, தோழர்.அனிமேஷ் மித்ரா தோழர், ஸ்வபன் சக்ரவர்த்தி ஆகியோர் BSNLEU சார்பாக கலந்து கொண்டனர்.


கீழ்க்கண்ட தகவல்கள் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டன.

(i)     BSNL வசம் 60000 டவர்களுக்கு மேல் இருக்கின்றன. ஆனாலும் அவைகள் மூலமாக அதிக வருமானம் ஈட்ட முடியவில்லை.
(ii)   டவர்களின் வாயிலாக மேலும் அதிக வருமானத்தை ஈட்டுவதற்காக ஒரு டவர் துணை நிறுவனத்தை உருவாக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
(iii) இதற்கான வழிகாட்டுதலுக்காக KPMG நிறுவனம் நியமிக்கப்பட்டு அது தனது அறிக்கையை அளித்துள்ளது.
(iv)     BSNL இயக்குநர்கள் குழு இதற்கான ஒப்புதலை அளித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர் குழுவின் முன் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளது.
(v) துணை நிறுவனம் உருவாக்கப்பட்ட பின், தொழில்நுட்பத்திற்காகவும் முதலீட்டிற்காகவும் அந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் இணைக்கப் படுவார்.  


இந்த தகவல்களைத் தெரிந்து கொண்ட பின், சங்கங்கள் கீழ்க்கண்டவாறு நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.


(i)   சங்கங்களைக் கலந்து ஆலோசிக்காமல், துணை நிறுவனத்திற்கு இயக்குநர்கள் குழு,  ஒப்புதல் அளித்தது தவறு என்று கடிந்துரைக்கப்பட்டது.

(ii) துணை நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் இணைக்கப்படுவார் என்பது, பங்கு விற்பனையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்றும் அது தனியார்மயமாக்கலில் போய்த்தான் முடியும், எனவே அதை ஏற்க முடியாது என்றும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.



நமது இந்த கருத்துக்கள் நிர்வாகத்தின் உரிய மேல்மட்டத்தில் எடுத்துரைக்கப்படும் என்று பொதுமேலாளர் (ஊழியர் உறவு) தெரிவித்தார்.

Monday 21 April 2014

பாரதிதாசன் நினைவு நாள் - ஏப்ரல் 21


சீர்மிகு கோவையில் சிறப்புக் கருத்தரங்கம்


ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின்படி
தமிழ் மாநில சங்கம் சார்பாக திறந்த வெளி கருத்தரங்கம்
மாநில தலைவர் தோழர் K.மாரிமுத்து தலைமையில்
கோவை மத்திய தொலைபேசி நிலைய வளாகத்தில்
மிக சிறப்பாக நடைபெற்றது.

வந்திருந்த அனைவரையும்
கோவை மாவட்ட செயலர் தோழர் ராஜேந்திரன் 
வரவேற்று உரை ஆற்றினார். 
மத்திய தொழிற்சங்கங்களின் 10 அம்ச கோரிக்கைகளும்,
அதற்கான போராட்டங்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய
நமது மாநில செயலர் தோழர் S செல்லப்பா அவர்கள்

தன் உரையில் பொதுத்துறை உருவான வரலாற்றையும்,
பொதுத்துறை நிறுவனங்கள் தன் லாபத்தில் அரசுக்கு அளித்த
மிக பெரிய பங்களிப்பையும் சுட்டி காட்டினார்.
உலகமயமாக்கல், தனியர்மயமாக்கல் கொள்கையை அமல்படுத்தும்
தற்போது உள்ள காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும்
அதற்கு முந்திய  பிஜேபி தலைமையிலான
தேசிய ஜனநாய கூட்டணி  அரசும்
பொது துறையை சீரழிக்கும் கொள்கையை கடைபிடிப்பதையும்
அதை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் 1991 முதல் இதுவரை நடத்திய
16 வேலைநிறுத்த போராட்டங்களிலும் நமது BSNLEU சங்கம்
பங்கேற்றதின் விளைவாகத்தான் இன்று வரை
1% பங்குகள்கூட விற்கப்படாமல் நமது BSNL நிறுவனம்
காக்கப்பட்டு உள்ளதை நினைவூட்டினார்.
மேலும் ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியமாக
ரூபாய் 10,000/- வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்
10 அம்ச கோரிக்கையில் உள்ளதை சுட்டி காட்டினார்.
மத நல்லிணக்கமும் தொழிலாளி வர்க்க கடமையும் என்ற தலைப்பில்
உரை நிகழ்த்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்
மாநில தலைவர்  தோழர் P சம்பத்

தன் உரையில் இந்தியாவின் பிரிவினைக்கு காரணமான
மதவாத சக்திகளின் போக்கை வரலாற்று சான்றுகளுடன் சுட்டி காட்டினார். தேச தந்தை மகாத்மாவின் படுகொலைக்கு காரணமான
மதவாத சக்திகள் மீண்டு எழுவது
தேச நலனுக்கு  மிக ஆபத்து என்பதையும்,
இந்தியாவில் மதவாத சக்திகளுக்கு எதிராக
உறுதியாக போராடக்  கூடிய ஒரே அமைப்பு
இடதுசாரிகள் மட்டுமே என்பதை அவர் ஆணித்தரமாக கூறினார்.
பாபரி மசூதி தாக்கபட்ட நேரத்தில்
இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் மட்டுமே
சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் நடைபெறவில்லை
என்பதை அவர் கூறினார்.
அதன்பின் தாராள மயமாக்கல் கொள்கையும்,
தொலை தொடர்பு கொள்கையும் என்ற தலைப்பில்
உரையாற்றிய நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள்

தாராளமய கொள்கையால், பொதுதுறை நிறுவனங்கள்
எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதையும், இக்கொள்கையால்
அரசு துறையில் ஊழல் புரையேடி போகும் அவலத்தையும் சுட்டி காட்டினார். கடந்த 2014 பிப்ரவரி மாதம் முதல்
30,000 கோடி ரூபாய் அந்நிய நாட்டு பணம்
இந்திய பங்கு சந்தையில் முதலீடாக கூடியதன் நோக்கம் பற்றியும்,
குஜராத் மாநிலத்தில் பெண்கள் பெருமளவில்
ரத்த சோகை நோயால்  அவதிப்படுவதையும்,
அந்த மாநில அரசு தினமும் 10 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வறுமை கோட்டிற்கு மேல் வாழ்வதாக கூறுவதின் 
அவலத்தையும் சுட்டி காட்டினார்.
கார்போரேட்  நிறுவனங்களும், அவைகளின் பெரும்பாலான ஊடகங்களும்  மோடியை தூக்கி நிறுத்துவதன் நோக்கத்தை அவர்   எடுத்துரைத்தார்.
ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின்படி
அனைத்து மாநிலங்களிலும் இக்  கருத்தரங்கம்
வெற்றிகரமாய்   நடைபெறுவதை சுட்டி காட்டினார்.
நிலுவையில் உள்ள  கோரிக்கைகளுக்காக
அனைத்து சங்கங்களும் இணைந்து போராட உள்ள சூழலையும்
அவர் கூறினார்.

தோழர் வெங்கட்ராமன் நன்றியுரை கூற கருத்தரங்கம் இனிதே முடிவுற்றது.