தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 3 December 2013

விலைவாசி உயர்வின் கடும் எதிரொலி : காய்கறி, பழங்கள் வாங்குவது 40 சதவீதம் குறைந்தது



அதிகரித்து வரும் உணவுப் பொருள் விலைவாசி உயர்வு காரணமாக வீட்டு உபயோகப் பொருள் வாங்கும் அளவு 40 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. தொழில் வர்த்தக சபை அமைப்பான அசோசெம் நடத்திய சமீபத்திய ஆய்வு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

தினசரி பொருள்களின் விலை உயர்ந்து வருவதால், வீட்டில் உபயோகிக்கும் பொருள்களின் அளவை மக்கள் கணிசமாகக் குறைத்துள்ளனர். இதனால் வாங்கும் அளவு 40 சதவீத அளவுக்கு வீழ்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும்பாலான பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாக அசோசெம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றின் நுகர்வு பெருமளவு குறைந்துள்ளது.


சத்து நிறைந்த பொருள்களை வாங்குவது, பழங்கள் வாங்குவது, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை உபயோகிப்பது ஆகியன பெருமளவு குறைந்துள்ளது. நடுத்தர மற்றும் நடுத்தர வர்கத்துக்கும் கீழ்நிலையிலான 72 சதவீத குடும்பத்தினரிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. விலைவாசி உயர்வு காரணமாக தங்களது நுகர்வைக் குறைத்துக் கொள்ளும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டதாக பெரும்பாலான குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களில் 3,000 பேரிடம் கருத்து கேட்டறியப்பட்டது. இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, புனே ஆகிய பெருநகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உணவுப் பொருள் விலையேற்றம் தவிர, அத்தியாவசிய தேவைகளான கல்வி, போக்கு வரத்து, மருத்துவம் ஆகியவற்றுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன.

இது அவர்கள் ஈட்டும் வருமானத்தை விட அதிகரித்ததால் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பெரும்பாலான குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த விலை ஏற்றத்தால் நடுத்தர, ஏழை குடும்பத்தினர் மட்டுமின்றி நடுத்தர குடும்பத்தினரும் பெருமளவு பாதிக்கப்பட்டதாக அசோசெம் இயக்குநர் செயலர் டி.எஸ். ரவாத் தெரிவித்துள்ளார்.

சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் பாரம்பரிய காய்கறிகளான தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. இது மக்களால் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.மாதாந்திர சம்பளம் பெறும் குடும்பத்தினர் ஒரு மாதத்துக்கு ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் வரை காய்கறிகள் மற்றும் பழங்களுக்குச் செலவிட வேண்டியுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதனால் தினசரி தங்களது உணவுத் தேவையைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது. பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அசோசெம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment