தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 9 October 2013

மனமார வரவேற்கிறோம்



மாற்றுத்திறனாளிகளுக்கான 1995 ஆம் ஆண்டு சமவாய்ப்பு மற்றும் முழு பங்கேற்பு சட்டப்படி மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து துறைகள் மற்றும் அமைப்புகளில் உள்ள மொத்த பணியிடங்களில் 3 சதவீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான முதல் அமர்வு அளித்துள்ள இத்தீர்ப்பு மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும் என, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் மனமாற வரவேற்றுள்ளது. தீர்ப்பு தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, துணைத் தலைவர் தே.லட்சுமணன், மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1995 ஆம் ஆண்டு ஊனமுற்றோர் சட்டத்தில் உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர் ஆகியோருக்கு தலா ஒரு சதம் என்ற அடிப்படையில் மொத்தம் 3 சத வீத பணியிடங்களை தரவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தாலும், அந்த சட்ட விதிகளை தவறாக திரித்து, ஒவ்வொரு பிரிவினராலும் எந்த வேலையைச் செய்ய முடியும் என்று அரசால் கண்டறியப்பட்ட வேலைகளில் மட்டுமே வாய்ப்புகள் தரப்பட்டன.

ஆனால், இன்றைய தீர்ப்பு இந்த நடை முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் உள்ள மொத்த காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அதனடிப்படையில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு 3 மாதங்களுக்குள் மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுவாக பணி நியமனங்களில் எல்லா பிரிவினருக்குமான மொத்த ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்ற விதி மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கீடு செய்வதில் பொருந்தாது என இன்றைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.

பல்வேறு சமூகத் தடைகளினால் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கிடைக்காத ஆபத்தான நிலை உள்ளதையும், இதனால் அவர்களுடைய வாழ்க்கையை வறுமையில் தள்ளியிருப்பதையும் தனது உத்தரவில் உச்சநீதிமன்றம் சரியாக மதிப்பீடு செய்திருப்பதை எமது சங்கம் ஆமோதிக்கிறது. எமது சங்கத்தின் அகில இந்திய அமைப்பான ஊனமுற்றோருக்கான தேசிய மேடையும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது.

No comments:

Post a Comment